தெலங்கானாவில் காங்கிரசிடம் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி.
தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. இந்த 5 மாநிலங்களில் வெளியாகும் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் நடைபெற்ற 3-வது சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெலங்கானா மாநில தேர்தல் முடிவு ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி 2-வது இடத்திற்கும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த நிலையிலும் பாஜக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறத் தொடங்கியது. காங்கிரஸ் ஆட்சி வந்தால் அடுத்த முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.