தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாபெரும் இயக்கம் நடத்தி, 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றது.
இதற்கு எதிராக, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த ரிட் மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் இன்று (ஜன 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் கூறியதாவது:-
குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.இதனால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்கக் கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்காத நீதிபதிகள் “கையெழுத்து இயக்கத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்றால் அதனை எப்படி தடுக்க முடியும்? குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.