புதிதாக கொண்டு வரப்பட்ட தேர்தல் ஆணையர் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவே பரிந்துரை செய்யும் நடைமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தை விலக்கி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம் பெறும் வகையில், மத்திய அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியதால், இது சட்டமாகியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்குழுவில் தலைமை நீதிபதியை ஒதுக்கி வைப்பதன்மூலம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை இந்த சட்டம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
புதிய சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார். ‘தயவுசெய்து இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து நிறுத்தி வையுங்கள். இது அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது’ என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள்: ‘எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவோம்’ என்றனர். மேலும், வழக்கு தொடர்பான மனுவின் நகலை மத்திய அரசின் வழக்கறிஞரிடம் வழங்கும்படி வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.