ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துர்கா ஸ்டாலினை ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அயோத்தி ராமர் கோய்ஹில் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். மேலும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் துர்கா ஸ்டாலினுக்கு வழங்கினர்.