மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலகினார்.
மிலிந்த் தியோராவின் விலகலுடன் 2019லிருந்து காங்கிரசிலிருந்து வெளியேறிய முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை 11 ஆனது.
இந்நிலையில், மூத்த காங்கிரஸ்காரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுஷில்குமார் ஷிண்டே சோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், எனக்கும், எனது மகளுமான எம்.எல்.ஏ. பிரணிதி ஷிண்டேக்கும் பா.ஜ.க.வில் சேர இருமுறை வாய்ப்பு வந்தது. ஆனால் நான் ஒரு காங்கிரஸ்காரன் என்பதால் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என உறுதிபடத் தெரிவிக்கிறேன் என்றார்.