இந்திய கூட்டணியின் வெற்றி மூலம் பாசிசத்தை வீழ்த்தி, பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. வரும் மே மாதத்துடன் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியை உருவாக்கின.
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில், இந்தியாவின் வெற்றி மூலம் பாசிசத்தை வீழ்த்தி, பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்! லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெறவிருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. இந்தியாவின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி – பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.