மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்லாவரம் கண்டோன்மெண்டில் மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: இந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார். ஆண்களுக்கு நிகராக, ஆண்களைவிட அதிகமாக, தாய்மார்கள், பெண்கள் பங்கேற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள். இன்றைக்கு என்னென்ன வழிகளில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒன்றிய அரசு மொழி திணிப்பை மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் மக்கள் அதை நம்பவேமாட்டார்கள். எனவே அ.தி.மு.க. பா.ஜ.க.வை விரட்டியடிக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் 2 கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம். இந்தி பாடம் இல்லாமலேயே இதையெல்லாம் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம். இந்தி திணிப்பை போலவே இப்போது நீட் நெக்ஸ்ட் என்று அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறார்கள். இதை மாற்றிக்காட்டுவோம். 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.