ஜெ.பிரஷாந்த்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்களின் காணிகளில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களை குடியேற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் என மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் சீனித்தம்பி தியாகராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு,மாதவனை ஆகிய பகுதிகளில் மேய்ச்சல்தரை பகுதிகளை அம்பாறை மாவட்டத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருடன் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடியதன் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வலய பணிப்பாளர்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர்,அப்பகுதி கிராம சேவையாளர்,பொலிஸ் அதிகாரி உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் அப்பகுதிக்கு சென்று நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பகுதிக்குள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் வருகைதந்து காடுகளை வெட்டி குடியேறியுள்ளது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்று சட்ட விரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டாம் என அங்கு சென்ற மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளினால் வலியுறுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த பகுதிக்குள் மகாவலி காணிகள் வழங்கப்பட்டுள்ளதனால் அங்கு சென்று குடியேறமுடியும் என்றும் இப்பகுதியில் குடியேறமுடியாது எனவும் அதிகாரிகளினால் வலியுறுத்தப்பட்டது.
குறித்த பகுதியில் பிக்கு ஒருவரின் தலைமையிலேயே குறித்த குழுவினர் அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் இருந்துவருகைதந்து காடுகளை வெட்டிவருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தாங்கள் கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதியுடனேயே குடியேறியுள்ளதாகவும் தாங்கள் இப்பகுதியில் சோளன் செய்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அங்கு குடியேறியுள்ளவர்களினால் தெரிவிக்கப்பட்ட அதேநேரம் ஆளுனருடன் தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்தி நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் காணிகளை வழங்கமுடியும் இங்கு வழங்குவது பொருத்தமாக இருக்காது என ஆளுரிடம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளினால் வலியுறுத்தப்பட்டது.
எனினும் அதனை அப்பகுதியில் அத்துமீறியுள்ளவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.
குறிப்பாக அம்பாறை-பொலநறுவை மாவட்டங்களுக்கு எல்லையாக இப்பகுதி காணப்படுகின்றபோதிலும் அந்தந்த மாவட்டங்களில் அதிகளவான காணிகள் எதுவித பயன்பாடுகளும் இல்லாமல் இருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் இவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு ஆளுனர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டு வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதி அபகரிக்கப்படுமானால் கால்நடைவளர்ப்பாளர்கள் தமது தொழில்களை இழந்து தற்கொலைசெய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் கால்நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காலம்காலமாக தாங்கள் கால்நடைகளை மேய்க்கும் பகுதியினை அபகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையவேண்டும் எனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிக்கு ஒருவரின் தலைமையில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது 2015ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குறித்த சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன் தமது ஆக்கிமிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து விரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர்.