திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் பிப்-9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக-வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழ்நாடு பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக விருப்ப 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் பிப்-9 ஆம் தேதி நடைபெற உள்ளது.