வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக் கோரி கூடுதல் காவல்துறை அளித்த மனு மீதான விசாரணை பிப். 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், 25-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஏதோ கலந்திருப்பதாக, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது அதில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டை கடந்த நிலையில் கூடுதல் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் விசாரணையை பிப். 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.