திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஆபாச போட்டோவை அனுப்பியவர் குறித்த விவரத்தை அழிக்காததால் வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி நேரில் ஆஜராக திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானுர் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோ வந்தது. அது மார்பிங் முறையில் ஆபாச போட்டோவாக மாற்றப்பட்டு இருந்தது. இது குறித்து இளம்பெண்
கிளிமானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச போட்டோ
அனுப்பியவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் தனக்கு வேறு ஒருவர் அதை அனுப்பி தந்ததாக அந்த நபர் கூறினார். பல மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தியும் போட்டோவை முதலில் அனுப்பிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து அந்த நபரை கண்டுபிடிக்க வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி இளம் பெண் திருவனந்தபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். அதை விசாரித்த நீதிமன்றம் விவரங்களை உடனே அளிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், விவரங்களை தர முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக பிப்ரவரி 7ம் தேதி வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கைது
வாரண்டு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டது.