முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டத்தால் கரூர் மாவட்ட பெண்மணி ஒருவர் சிறு தொழில் முதலாளியாக உயர்ந்துள்ளார்.
கரூர் மாவட்டம், ஆண்டான் கோவிலைச் சேர்ந்த அமுதவல்லி என்பவர் வீடுகளுக்குப் பயன்படும், ஆடைகள் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தார். அதன் காரணமாக மாவட்டத் தொழில் மையத்தை அணுகி தான் சுயமாகத் தொழில்புரிவதற்குக் கடன் உதவிபுரியுமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்ய விரும்பும் சிறு ஜவுளித் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு உதவி செய்திட மாவட்டத் தொழில் மையம் முன்வந்தது. அதன் பரிந்துரையுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுதவல்லிக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின்கீழ் 9 இலட்சத்து 87 ஆயிரம், ரூபாயை தொழில் கடனாக வழங்கியது. அதில் 35 சதவிகிதத் தொகை 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக அமுதவல்லிக்கு கிடைத்தது.
அத்துடன், வங்கிக் கடன் தொகைக்குரிய வட்டியில் 6 சதவிகித வட்டித் தொகையையும் அரசு மானியமாக அவருக்கு அளித்தது. இந்தக் கடன் உதவியோடு, அமுதவல்லி தன் விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் மூலம் ஆண்டுக்கு 30 இலட்சம் ரூபாய்க்கு மேல் அவர் தயாரித்த ஆடைகள் விற்பனையாயின.
இதில் அவருக்கு 8 இலட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம் சாதாரண ஒரு பெண்மணியைப் புதிய தொழில் முகவராக மாற்றிச் சாதனை படைத்துள்ளது. மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தன்னைத் தொழில் முதலாளியாக உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை அமுதவல்லி வெளிப்படுத்தியுள்ளார்.