மறைந்த தேமுமுக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு தென் மாவட்டச் செயலாளர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளனர். அதேநேரம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனை மதுரையில் போட்டியிட வைக்கும் முடிவில் பிரேமலதா இருப்பதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் அதைத் தங்களுக்கு சாதகமாக்கும் எதிர்பார்ப்பில் அதிமுக, தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது.
ஆனால், தேமுதிக தற்போது வரை பிடிகொடுக்காமல் பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், 2025-ம் ஆண்டு நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல், அதற்கு அடுத்த ஆண்டு நடக்க உள்ள 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டுதான் கூட்டணி அமைக்க வேண்டும் என ஆலோசித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தென் மாவட்டச் செயலாளர்கள் ஒரே குரலில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை மதுரையில் போட்டியிட வைக்க வேண்டும் எனவும், அதற்கு பிரேமலதாவும் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்ததால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர் .
பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பேசிய பிரேமலதா, ”எல்லா சித்தாந்தமும், சமூக நீதியும் உள்ள கட்சிதான் தேமுதிக. 14 சீட், 1 மாநிலங்களவை இடம் தருவோர் உடன் கூட்டணி” என்று தெரிவித்தார்.