அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெ ஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத் துறை, அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்து 5 முறை சம்மன் அனுப்பியது. அவற்றை ஏற்க மறுத்து வரும் கெ ஜ்ரிவால், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, டிசம்பர் 22-ம் தேதி, கடந்த ஜனவரி 3-ம் தேதி, ஜனவரி 18-ம் தேதி, கடந்த 2-ம் தேதி என மொத்தம் 5 முறை சம்மன் அனுப்பியது. கடந்த ஆண்டு சம்மனை ஏற்க மறுத்தபோது, பல்வேறு பணிகள் தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டினார். ஆனால், டெல்லியில் இருந்தபோதும் 5 சம்மன்களையும் ஏற்க மறுத்துள்ளார். அதோடு, இது சட்டவிரோதமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி வருகிறார்” என தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் வழக்கு தொடர முடியும் என்றும், இல்லாவிட்டால் தனக்குப் பதிலாக தனது வழக்கறிஞர் ஆஜராவார் என தெரிவிக்க முடியும் என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.