சமீபத்தில் ஃபேஸ்புக் லைவ்வில் நடந்த கொலை, குற்றம்சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தது என்று மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கூறிய எதிர்க்கட்சிகளின் குற்றம்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் உள்துறையை வைத்திருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த சம்பவம், அவர்களின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தது. இது தீவிரமானது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட விரோதங்களால் நடந்த குற்றங்களை சட்டம் – ஒழுங்குடன் இணைத்து பேசுவது தவறானது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியினர், மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் மகாராஷ்டிரா மாநில அரசை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, சிவசேனா (உத்தவ் அணி) விசுவாசியான வினோத் கோசல்கர் மகன் அபிஷேக் கோசல்கர், வியாழக்கிழமை மாலையில் ஃபேஸ் புக் லைவில், உள்ளூர் தொழிலதிபரும் சமூக செயல்பாட்டாளருமான மொரிஸ் நோரோகாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து நோரோகா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் தெரிவித்திருந்தனர்.
பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா பிரமுகர் ஒருவரை உல்காஸ்நகர் காவல் நிலையத்தில் வைத்து பிப்.2-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தினார். இது நடந்த சில நாட்களுக்கு பின்னர் உத்தவ் சிவசேனா அணியைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அபிஷேக் கோசல்கர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பத்திரிகையாளர் வாகனம் தாக்கப்பட்ட சம்பவங்களை சுட்டுக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து குண்டாஸ் ராஜ்ஜியம் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.