கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. இந்த மாவட்டம் கர்நாடகா மற்றும் தமிழக எல்லையையொட்டி உள்ளது. இதனால் இந்த இரு மாநிலங்களிலிருந்தும் வனவிலங்குகள் வயநாடு வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
வனப்பகுதியில் இருந்து சில சமயங்களில் ஊருக்குள் வரும் புலி, சிறுத்தை, யானைகள்
உள்பட வன விலங்குகளால் இப்பகுதி மக்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து வயநாடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை திடீரென மானந்தவாடி அருகே உள்ள படமலை என்ற ஊருக்குள் புகுந்தது.
இதையடுத்து அந்த யானை சாலையில் நடமாடியது. இதனை யாரும் பார்க்கவில்லை. இந்த நிலையில் யானை திடீரென அங்குள்ள ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. இது எதுவும் அறியாமல் வீட்டின் கதவை மூடாமல் அஜி என்பவர் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அஜியை பார்த்த யானை உடனே அவரது அருகே சென்று காலால் எட்டி உதைத்தது. தூக்க கலக்கத்திலிருந்த அஜியால் ஓடவும் முடியவில்லை. அதனால் அந்த யானை அஜியை காலால் பலமுறை மிதித்தே கொன்றுவிட்டது.
இதுகுறித்து அறிந்ததும் வயநாடு மாவட்ட வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். யானை தொடர்ந்து அதே பகுதியில் இருப்பதால் அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அஜியின் வீட்டுக்குள் யானை புகுந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலத்திலும் இந்த யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
இதனால் கர்நாடகா மாநில வனத்துறையினர் அந்த யானையை பிடித்து அதன் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ரேடியோ கார்டன் பொருத்தினர். இந்த நிலையில் இந்த யானை தற்போது வயநாடு மாவட்டத்திற்கு வந்துள்ளதால் அதை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார்.
காட்டு யானை ஊருக்குள் புகுந்ததை தொடர்ந்து மானந்தவாடி நகராட்சி பகுதியில் 4 வார்டுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே யானை ஊருக்குள் வந்தது குறித்து வனத்துறை முறையாக அறிவிப்பு வெளியிடவில்லை என்று கூறி அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.