லோக்சபா தேர்தலுக்காக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பார்லிமென்ட் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும். இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா? ஜனநாயகம் நீடிக்குமா?.
அரசியல் சட்டம் நிலைக்குமா? பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா? என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும். தமிழக மக்களுக்கு பா.ஜ., செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்தது அதிமுக. மக்களின் எதிரிகளான இந்த 2 கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
தி.மு.க.வின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள்.
தலைநகர் டில்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்?. பா.ஜ., அரசுதன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது. உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்…உழவர்களா? அரசாங்கமா?. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.