மாணவிகளைப் போன்று மாணவர்கள் உயர் கல்விக்கும் மாதம் ரூ. 1000 வழங்கும் ,’ தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில் பல புதிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ‘தமிழ்ப் புதல்வன்’ என்பதும் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மாபெரும் திட்டம்
தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.
3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்
இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்.
உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள்
இதுவரை சுயஉதவிக் குழு இயக்கத்தில் இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில், 35,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.
நீதிபதி கே.சந்த்ரு அறிக்கை அமல்
* அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றைத் திறம்படச் செயல்படுத்தவும், அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உரிய ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், உரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது என இந்த அரசு முடிவு செய்துள்ளது.
சமூகப் பாதுகாப்புத் துறை பெயர் மாற்றம்
இதுவரை சமூகப் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தத் துறை, இனி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும், தலைமைப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, துறையின் மனிதவள மேலாண்மை உறுதி செய்யப்படும்.
*முதற்கட்டமாக கோவையில், குழந்தைகளுக்கான திறன்பயிற்சிக் கூடம், ஆலோசனை அறைகள், நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, மருத்துவப் பரிசோதனை அறை, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளுடன் கூடிய ஒரு மாதிரி இல்லம் பூஞ்சோலை என்ற பெயரில் அமைக்கப்படும்.
*இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு 7,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.