தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்து மக்களை மட்டுமல்ல மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தால் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தோம். சொன்னதைச் செய்து காட்டும் இந்த அரசானது, ஆட்சிக்கு வந்த உடனேயே வேளாண் அறிக்கையைத் தயாரித்துத் தாக்கல் செய்தது.
தாக்கல் செய்த அறிக்கையின்படி செயல்பட்டது. இதன் மூலமாகத் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு அதிகமானது, விளைச்சல் அதிகமானது, உற்பத்தியான பொருளுக்கு நல்ல விலை கிடைத்தது, உழவர் பெருமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடையும் வகையில் பலனைப் பெற்றார்கள், மண்ணும் செழித்தது, மக்களும் செழித்தார்கள், இதனைக் கண்முன்னால் கண்டு வருகிறோம்.
இந்த வரிசையில் நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இரண்டு மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ, அல்லது, அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம்செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக 2024 -25- ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களைப் பாராட்டுகிறேன். துறையின் செயலாளர் செல்வி. அபூர்வா அவர்களுக்கும், துறை சார்ந்த மற்ற அதிகாரிகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.