உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் எதிரொலியாக, சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர்.
இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு
இன்று (பிப் 20) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக, சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் ‘எக்ஸ்’ குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது முதன்முறை என்பதால் இந்த வழக்கு தேசிய கவனம் பெற்றது. இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லும் வாக்குகளாகக் கருதி மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவுகளை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முந்தைய முடிவு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி 3 வாரங்களில் விளக்கமளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.