இன்றைய (பிப் 20) சண்டிகர் மேயர் தேர்தல்வழக்கின் விசாரணையின்போது செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டவை மீண்டும் நீதிபதிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன .
அப்போது தேர்தல் அதிகாரி அனில் மசிக்கை குறிப்பிட்ட தலைமை நீதிபதி “மிஸ்டர். மசிக் சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு என்பதால் பேனாவை வைத்து குறியிட்டதாக கூறினீர்கள். எங்கே இந்த வாக்குச் சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது?” என்று கேட்டபோது பதில் எதுவும் கூறாத மசிக், வாக்குச்சீட்டை தனது வழக்கறிஞருடன் பார்த்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்டவர்கள், “எந்த வாக்குச்சீட்டுகளும் செல்லாதவை அல்ல. அனில் மசிக் நீதிமன்றத்திலேயே பொய் கூறியுள்ளார். அவர் குற்றவாளி. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.
பின்னர் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “8 வாக்குச்சீட்டிலும் மனுதாரருக்கு (ஆம் ஆத்மி வேட்பாளருக்கு) ஆதரவாக வாக்குகள் விழுந்துள்ளது தெரிகிறது. ஆனால், வாக்குச்சீட்டை செல்லாததாகக் கருதும் நோக்கத்திற்காக தேர்தல் அதிகாரி, பேனாவால் அதில் அடையாளம் வைத்துள்ளார். இதன் மூலம் தேர்தல் அதிகாரி சட்ட விதிகளை மீறியுள்ளார். மனுதாரருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாகிறது. 8 வாக்குச் சீட்டுகளும் சிதைக்கப்பட்டதால்தான் பேனாவால் குறியிட்டதாக தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் ஆணித்தரமாக அறிக்கை அளித்தார். ஆனால் வாக்குச் சீட்டுகள் எதுவும் சிதைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிக் குற்றவாளி. அவர் மீது வழக்குப் பதிய வேண்டும்” என்று உத்தரவிட்டது.