கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள மறையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 65). இவரது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். கடைசியாக மதுரையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு லட்சுமணன் மறையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மனைவி இந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமணனுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவருடைய தங்கை மகன் அருண்(23) அருகில் உள்ள காந்தலூரில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி மாமாவின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த மாதமும் இங்கு வந்து இருந்தார்.
இன்டர்நெட்டுக்கு அடிமையான அருண் எந்த நேரமும் கையில் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பாராம். இது லட்சுமணனுக்கு பிடிக்கவில்லை. ஆகவே, கடந்த மாதம் வீட்டுக்கு வந்த போது அருணின் செல்போனை லட்சுமணன் வாங்கி வைத்துக் கொண்டார். இது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று (பிப் 19) இரவு மாமாவின் வீட்டுக்கு வந்தார் அருண்.
அப்போது தன்னுடைய செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், லட்சுமணன் கொடுக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அருண் தன்னுடைய காரில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மாமா லட்சுமணனை
சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதன் பிறகு அருண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அறிந்ததும் மறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதை தொடர்ந்து
லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய அருணை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அருணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.