பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு விவசாயிகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி எல்லைப் பகுதியான கனௌரி எல்லையில் பேரணியாக வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் படையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், அரியானா காவல்துறையினர் ரப்பர் குண்டுகளை வீசியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தாக்குதல் நடத்தினர். விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு விவசாயி பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் ஷுப் கரன் சிங் என்ற 24 வயது விவசாயி தலையில் குண்டு பாய்ந்து மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பல விவசாயிகள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் நடந்த இடத்தில் இருந்து 12 துப்பாக்கிக் குண்டுகளின் காட்ரிஜ்களையும் விவசாயிகள் ஊடகங்களுக்குக் காட்டினர்.
எனினும், இரண்டு விவசாயிகள் பலியானதாக செய்திகள் வெளியான போதும், ஒருவரது உயிரிழப்பு மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும், விவசாயிகள் பலியானதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்றும் அரியானா காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.