மைத்தேயி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கலாம் என்று 27 மார்ச், 2023-ல் வழங்கிய தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பத்தியை நீக்கி மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தப் பத்தி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த மணிப்பூர் உயர் நீத்மன்ற நீதிபதி கோல்மைய் கைபுல்ஷில்லுவின் தலைமையிலான அமர்வு, “மனுதாரர்கள், ரிட் மனு விசாரணையின்போது தங்களின் உண்மை மற்றும் சட்டம் பற்றி தவறான புரிதல் காரணமாக நீதிமன்றத்தை சரியாக வழிநடத்த தவறிவிட்டனர். அதனால் சட்டத்தின் தவறான புரிதலில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், அந்த உத்தரவு, மகாராஷ்டிரா அரசு – மலிந்த் அண்ட் ஓஆர்எஸ் வழக்கில், பழங்குடியினர் பட்டியலை நீதிமன்றங்கள் மாற்றவோ, திருத்தவோ முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் உள்ளது.அதன்படி, முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பின் பத்தி எண் 17 (iii) நீக்கப்பட வேண்டும். எனவே, அந்தப் பத்தி நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது” என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு மணிப்பூரில் பெரும் இனக் கலவரத்துக்கு வழி வகுத்தது. இதனால் மாநிலத்தின் குகி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த இரண்டு சமூகத்தினர் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவி போர்க்களமாக மாறியது. 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்தக் கலவரங்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் மார்ச் 27 தீர்ப்பினை எதிர்த்தும், கலவரம் தொடர்பாகவும் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் அதே ஆண்டில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அருவருக்கத்தக்கது என்று கூறியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “நான் உங்களுக்கு (வழக்கறிஞர்களுக்கு) ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது. அந்த உத்தரவை நாம் நிறுத்தி வைக்கலாம் எனக் கருதுகிறேன்” என்று கூறியிருந்தது.
இந்தப் பின்னணியில் மைத்தேயி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கலாம் என்று 27 மார்ச், 2023-ல் வழங்கிய தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பத்தியை நீக்கி மணிப்பூர் உயர் நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது.