நாகர்கோவிலில் முன் விரோதத்தில் சட்டக் கல்லூரி மாணவரை சரமாரியாக வெட்டிய வழக்கில் சக மாணவர் உள்பட கண்டால் தெரியும் சிலர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் அபிஸ்(24) இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேறு சில மாணவர்களும் படித்து வருகிறார்கள். கடந்த 22ம் தேதி தேர்வு முடிந்ததை தொடர்ந்து மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
அபிஸ் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார். அந்த பெட்டியில் அபிசுடன் கல்லூரியில் படிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சில மாணவர்களும் இருந்தனர். இதில் சிலர் கூச்சியிட்டவாறு இருந்தனர். இதை அபிஸ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள்
அபிசுடன் தகராறு செய்தனர். உடனடியாக மற்ற பயணிகள் அவர்களை கண்டித்தனர்.
இந்த நிலையில் நேற்று (24ம் தேதி ) மாலை 3 மணியளவில் தட்டான்விளை பார்க் ரோட்டில் அபிஸ் தனது நண்பர் விக்னேஷ்
என்பவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் கல்லூரியில் படிக்கும் வடசேரி புளியடி பகுதியை சேர்ந்த சக மாணவர் அஜித் மட்டும் அவரது நண்பர்கள் சிலர் அங்கு வந்து வழிமறித்து அபிசுடன் தகராறு செய்துள்ளனர். ரயிலில் தகராருக்கு வந்தது ஏன்? என கேட்டு அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் அபிசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அபிசுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். இதையடுத்து அஜித் மற்றும் அவருடன் வந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர்.
படுகாயம் அடைந்த அபிஸ் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி அஜித், ஜூடி மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.