சென்னையில் புதன்கிழமை அன்று காலமான சாந்தன் அதற்கு முன்னர் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 29.02.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு இருவரும், சாந்தனை இலங்கை அனுப்ப எப்போது அனுமதி வழங்கப்பட்டது என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். கடந்த ஜனவரி 22-ம் தேதியே சாந்தன் இலங்கை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், “மத்திய அரசு ஜனவரி 22-ம் தேதியே அனுமதி அளித்த பிறகும் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை” என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “ஜனவரி 24-ம் தேதி முதலே சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால், நடக்க கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல தூதரக அனுமதி ஆவணம் உள்ளிட்ட அனைத்து அனுமதியும் உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.