நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சியமைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்து பாஜக தேர்தல் குழுவினர், தமாகா தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான ஜி.கே.வாசனை சந்தித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அப்போது தமாகா சார்பில் 4 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த முதல் சந்திப்பு ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. தேர்தல் சம்பந்தமான வெற்றி யூகம் குறித்து இந்த சந்திப்பில் பேசினோம். இதையடுத்து, வருகின்ற 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் தரப்பிலான விருப்ப மனுக்கள், சென்னையில் வழங்கலாம். பிரதமர் நரேந்திர மோடியை 3 ஆவது முறையாக பிரதமராக அமர வைத்து தமிழ்நாட்டின் நலனை உயர்த்துவதே எனது விருப்பம். நேற்று இந்திய மக்களுக்கு நல்ல ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ஜிடிபி 8.4 சதவிகிதம் வெளிவந்து இருப்பது இந்தியாவில் அனைத்து துறைகளுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது.
இதனால் நாடு உயரும், வளரும் என எங்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் போதை பொருட்கள் கடத்தல், விற்பனை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதனால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தவறு செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு தமிழ்நாடு அரசு அடக்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பிராந்திய கட்சியாக இருந்தாலும் தேசிய பார்வை கொண்ட கட்சி, சுதந்திர போராட்டக்காரர்கள் இருக்கிறார்கள், தேசப்பற்று மிக்கவர்கள் இருக்கிறார்கள்.
எனவே தேசப்பற்று கொண்டவர்கள் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும், ஏழ்மை குறையும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தேர்தல் குழு அமைக்கப்படும். தொகுதிகள் குறித்து விவாதித்து அறிவிக்கப்படும். இன்னும் 4 – 5 நாட்களில் போட்டியிடுபவர்கள் உள்ளிட்டோருக்கான பெயர்களும், தேர்தல் குழுவில் விவாதிக்கப்படும். கூட்டணி கட்சிகளின் தலைவர் என்ற முறையில் நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தெரிவித்தார்.