பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது பியூசி எனப்படும் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவை சேர்ந்த அபின் என்ற இளைஞர், கல்லூரி வளாகத்தில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் மீது திடீரென ஆசிட்டை வீசினார். அந்த ஆசிட் அருகில் இருந்த 2 மாணவிகள் மீதும் பட்டது. இதனால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். மாணவிகள் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது ஆசிட் வீசியதாக இளைஞரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.