தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாடாளுமன்றவாரியான கருத்து கேட்பு கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் பேசியதாவது: இன்றைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் 39 தொகுதியில் இருக்கக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
அதனுடைய ஒரு பகுதியாக இன்றைக்கு தென் சென்னை நாடாளுமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் நமது நிர்வாகிகள் கூட்டத்தில் யார் யார் வேட்பாளராக வரலாம் அல்லது நீங்கள் யாரை பரிந்துரைக்கிறீர்கள் என்ற கருத்து கேட்கும் கூட்டமானது நிர்வாகிகள் இடத்தில் கேட்கப்பட்டு இருக்கிறது. விரைவில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திருப்பூர் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா, அதே போல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடத்த நிகழ்ச்சிகள் இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் என பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும், எங்கள் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். தேசிய வேட்பாளர் பட்டியல் பொறுத்த வரையில் நான் ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால், நிச்சயமாக விரைவிலேயே தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.