மதம், சாதி, புராணம் போன்றவற்றை அரசியலில் கொண்டு வந்து பெரியார், அம்பேத்கர் எதை தடுக்க நினைத்தார்களோ அதை மீண்டும் கொண்டுவர பாஜகவினர் நினைப்பதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமையில் சமூக நீதி காப்போம் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் மதிவேந்தன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டு மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: “நாடு முழுவதும் சமூக நீதி கேள்விக்குள்ளாககூடிய நிலையில் உள்ளது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். எல்லோரும் இணையாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற பாகுபாடு இல்லாதது தான் சமூக நீதி. ஒரு காலத்தில் இந்தியா அவ்வாறு தான் இருந்தது.
ஆனால் இப்போது மதத்தினை வைத்து அரசியல் செய்யும் ஆட்சியானது மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் போராடக்கூடிய இடத்தில் அவர்கள் டெல்லிக்குள் வரக்கூடாது என்பதற்காக முள்வேலி போட்டு அவர்களை தடுக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் திருமணத்துக்காக ஒரு விமான நிலையம் 10 நாட்களில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுகிறது. அது எந்த குடும்பம் என்று உங்களுக்கே தெரியும். பிற்படுத்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய ஆட்சியை பாஜக கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் வருமானம் உயர்ந்துள்ளது என்கிறார்கள். ஆனால், அது அம்பானி, அதானி, பாஜகவினருக்கு மட்டும் தான்.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக பல கோடி வருமானங்கள் நிதியாக பாஜகவுக்கு சென்றுள்ளது. சட்டப்பூர்வமான ஊழல்களை செய்வது பாஜக மட்டுமே. ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் பின்னுக்கு தள்ளுகிறது பாஜக. நாட்டின் ஒவ்வொரு இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்க கூடிய ஆட்சி பாஜக ஆட்சி. ஆங்கிலேயர்கள் எப்படி நமது வரியை எடுத்துக்கொண்டு திருப்பிக் கொடுக்காமல் சென்றார்களோ, அதே போல இன்று மத்திய அரசு ஆங்கிலேருடைய ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது. மதம், சாதி, புராணம் போன்றவற்றை அரசியலில் கொண்டு வந்து பெரியார், அம்பேத்கர் எதை தடுக்க நினைத்தார்களோ அதையே மீண்டும் கொண்டுவர நினைக்கிறார்கள்” என பேசினார்.