நேபாள நாட்டில் பேருந்து ஒன்று, தலைநகர் காத்மண்டுவை நோக்கி காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 48 பேர் பயணம் செய்தனர்.
அப்போது, தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில், பேருந்தானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். அவர்களை காப்பாற்ற அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடினர். இந்த நிலையில், ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் நீருக்குள் மூழ்கினர். இதில், 5 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர். இதனால், விபத்தில் மொத்தம் 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். விபத்தில், 30 பேர் காயமடைந்தனர். இதுபற்றி மாவட்ட காவல்துறை உயரதிகாரி கே.சி. கவுதம் கூறும்போது, சரியான சாலை வசதி இல்லாததே விபத்திற்கு காரணம் என பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் பற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம் என கூறினார்.