கேரளாவில் நீண்ட நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் கருணாகரன். காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. கடந்த 2010 ம் ஆண்டு காலமானார்.
கருணாகரனின் மகன் முரளீதரன் தற்போது வடகரை தொகுதி எம்பியாக உள்ளார். மகள் பத்மஜா வேணுகோபால் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். கடந்து 2004 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முகந்தபுரம் தொகுதியிலும் 2021ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அடிக்கடி காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி அவரது கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் பத்மஜா வேணுகோபால் பாஜகவில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. ஆனால், நேற்று முன்தினம் தனது முகநூலில் அதை திட்டவட்டமாக மறுத்தார். தான் ஒருபோதும் பாஜகவில் சேரப்போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது பத்மஜா வேணுகோபால் பாஜகவில் சேரப் போவது உறுதியாகி உள்ளது.
திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அவர், பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து அந்த கட்சியில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மகன் அனில்ஆன்டனி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நிலையில் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலு பாஜகவில் சேர உள்ளது கேரளா காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.