தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளதாக சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
டில்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. இந்நிலையில் மார்ச் 9 ஆம் தேதி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதாகக் கூறி அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் காமராஜர் சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ், அதிமுக அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெ. ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து உள்ளது. இதனை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பல வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால், திமுக அரசு இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தற்போது தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.