கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன்..
உறவுகள் எப்போதும் நலனியல் அடிப்படையிலும் தேவை தீர்த்துக் கொள்ளுதல் என்பதில் இருந்து தான் உருவாகும் என்பது நிதர்சனமான உண்மை அதை தான் பொருள் முதல் வாத உறவு என்றார் மாக்ஸ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர இராஜீக அணுகுமுறை என்பது கூட நலனியல் சார்ந்தவையே.
இவை உலகளாவிய துருவ அரசியலுக்குள்ளும் இதுவே முதன்மைப்படுகிறது. ராஜதந்திரம் எனும் சொல்லுக்கு சாமானிய அர்த்தில் போக்கிலித்தனம் என்றே அர்த்தம் படுத்தலாம்.
படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதிகம் செய்வது அதாவது முகத்துக்கு நேரே உண்மை பேசாமல் பின்னர் இரண்டக வேலை செய்வதையே. நாகரீகமான சொல்லாடலில் தந்திரோபாயம் என விழிக்கின்றோம்.
இதனால் சமூகத்திற்கு கேடு விளைவிக்குமே தவிர ஏற்றமோ மாற்றமோ நிகழ்வதில்லை. புராணங்கள் தொடக்கம் நவீனத்துவம் வரை சாணக்கியர்களே சான்றோர்கள் ஆகும். விதி தோற்றம் பெற்று பெரு வளர்ச்சி பெற்றுவிட்டது. தற்போதைய மென்வலுவினுடைய அசுர வளர்ச்சியும் இதை நோக்கியே வேகமாக நகர்கிறது.
ஆக மொத்தத்தில் உலகில் இனி அறம், சத்தியம், நீதி, சமூக சமநீதி , சமத்துவம், இவற்றை இனி ஏடுகளில் மாத்திரமே இறுக பற்றி இருக்கும் செயலற்ற சொற்களாக இவை மதபீடங்களிலே கூட இல்லாத போது அரசியலில் எதிர் பார்ப்பது தகுமா எனும் கேள்வி சாமானியமாக எழுவது இயல்பானதே அதனால் தான் அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் எனும் நீதி நெறி வார்த்தை இன்றைய நவீன அரசியலுக்கு பொருந்துகிறதா என்பது சந்தேகமே.
ஜே. ஆர் ஜெயவர்த்தனா இந்திராகாந்தியின் பிராந்திய அரசியல் மோதலால் இந்திரா காந்தியால் தமது தேவைக்காக வடிவம் கொடுத்து வளர்க்கப்பட்டது தான் ஆயுதக் குழுக்களின் உருவாக்கம்.பின்னர் வளர்த்த கடா மார்பில் பாயுது எனும் நிலையும் அவர்களாலே உருவாக்கப்பட்டது.
அகிம்சையை போதிக்க வேண்டிய காந்திய தேசம் ஆயுதத்தை திணித்து வன் முறையாளர்களாக சித்தரித்து எம்மை ஏதிலிகள் ஆக்கியது மட்டுமல்ல உலக அரங்கிலே எம்மை பயங்கரவாதி எனும் நிலையையும் தோற்றுவித்தது. பயனற்ற பதின்மூன்றாவது திருத்தத்தால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.
அதைக்கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்க தயாரில்லாத இந்தியா தமிழர் நலனில் அக்கறை செலுத்துவது போல் அவ்வப்போது நீலிக்கண்ணீர் வடிப்பதுண்டு இதில் காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும் ஒன்று தான் இருவரும் சளைத்தவர்கள் இல்லை.
தனது பிராந்திய நலனுக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தான் கள்ளக்காதல் கொள்வதுண்டு. அதுவும் வடகிழக்கு வளச்சுறண்டலுக்காக இதய பூர்வமாக இல்லை. இந்திய மீனவர் விவகாரமும் கூட அடக்குமுறையின் வெளிப்பாடே இவர்களால் தான் அதிகம் போதைப் பொருளும் நாட்டிற்குள் வருகிறது. தமிழ் அரசியல்வாதிகள் வாதிகளில் அதிகமானவர்கள் இந்திய அடிமை விசுவாசிகள்.
அவர்களுக்கு பல விதமான வர்த்தக வாழ்வியல் நலனியல் தொடர்புகள் மிக நீண்ட காலமாக உள்ளது. அதனால் தான் இவர்கள் யாவரும் எஜமானின் நல்ல அடிமைகளாக சேவகம் செய்கிறார்கள்.
தமக்கு வாக்களித்தவர்களின் நலனை விட இந்திய விசுவாசமே மேலானது என்பதை எப்போதும் நிரூபிப்பவர்கள். இதற்கு சிறந்த உதாரணம் சனாதிபதி தெரிவின் போது இந்திய தூதரத்தின் வேண்டுகையினால் டலசுக்கு வாக்களிக்க தீர்மானித்தவர்கள் என்ற விடயம் வெளியே வந்து பெரும் சர்ச்சைக் குள்ளகியது யாவரும் அறிந்ததே.
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் ஒரு போதும் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான் என்கிறது ஒரு வியட்னாம் பழமொழி. தற்போது அரசியல்வாதிகள் கடந்து காவியுடையின் ஊடக ஊடுருவியுள்ளது.
அது மிகவும் ஆபத்தானது ஈழத்தமிழர்களுக்கு இந்துத்துவம் எனும் கவசம் தமிழ்தேசியததையே சிதறடிக்கும் எமது விடுதலை உணர்வையும் தியாகத்தையும் மழுங்கடிக்கும்.மதம் எப்போதும் தேசியத்திற்கு எதிரானது நல்ல மதவாதி நல்ல தேசியவாதி ஆக முடியாது நல்ல தேசியவாதி நல்ல மதவாதி ஆக முடியாது.மதம் என்பது அறிவற்ற உணர்வடிமை அது வன்மத்தையும் அகங்காரததையுமே பிரதிபலித்து சமூகத்தை கூறு போடும் அதனால் தான் பெரியாரிசத்தால் தமிழகத்திற்குள் மதவாத சக்திகள் காலூன்ற முடியாமல் தடுமாறுகிறது.
கர்நாடகா தவிர்த்து தென்னகம் முழுவதும் இந்த நிலை தொடர்கிறது. இந்திய நலனில் உள்ள காசியானந்தன் போன்றவர்கள் தாம் அடிமை சேவகம் புரிவது மாத்திரமன்றி இந்து தமிழிழம் கேட்டால் இந்தியா ஆதரிக்கும் என்று ஏகபோக அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறார் இவர் மட்டுமல் புத்திஜீவிகள் என்று தங்களை தாங்களே கூறித் திரியும் சிலரும் சில புலம் பெயர்ந்தவர்களும் இவ்விதமான கோமாளித் தனத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால் எமக்கு கிடைத்த நலன் என்ன. இலங்கை அரசு சீனாவுக்கு சார்பாக வெளிப்படையாக பல தடவைகள் இருந்த போதும் கூட கொழும்பு டில்லி உறவில் பெரிய விரிசல் ஏற்படவில்லை.
அரசுக்கும் அரசுக்கும் தான் உறவு என்பதில் அரசுகள் எப்போதும் தெளிவாக உள்ளது. அரசற்ற தரப்புக்களை கண்டு கொள்வதே இல்லை. இதுவரை தமிழ் மக்களுக்கு உருப்படியாக இந்தியா உளப்பூர்வமாக என்ன செய்தது முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு கூட மிகவும் நெருக்கமான முறையில் உதவியது 2009 மே மாதத்தில் மட்டும் பல தடவைகள் அன்றைய ஆட்சியாளர்களான பிரணாப் முகர்ஜி, எம் கே நாராயணன்,சிவசங்கர் மேனன் போன்றோர் அடிக்கடி கொழும்புக்கு வந்து இன அழிப்பு யுத்தத்தை தாமே நாடாத்துவது போல் இறுமாப்பு மகிழ்ச்சியடைந்தனர் என்பதை எவரும் மறந்து விடமாட்டார்கள்.
தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அடிமைகளாக இருக்கலாம் ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வு ராஜபக்சேக்களுக்கு நிகராகவே உண்டு.
ஏனெனில் இந்திய அமைதிப்படையின் அநியாயம் இலகுவில் நினைவிழந்து விடுமா? ராஜீவ் காந்தியை ஈழத்தமிழர்கள் கொலை செய்தார்கள் எனும் வெறும் வாதத்தை வைத்துக்கொண்டு ஒரு இனத்தையே இந்தியா கொலை செய்தது என்று தமிழ் மக்களில் பலர் நம்புகிறார்கள்.
ஆனால் இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தில் உள்ள மன்மோகன்சிங்கை பத்து ஆண்டுகள் பிரதமராக வைத்து அழகு பார்த்தார்கள். இதுதான் பாரதத்தின் பரி நிர்வான நீதியோ . தற்போது யாழில் உள்ள துணைத்தூதரகம் தமிழ் மக்கள் மத்தியில் இந்திய சார்புநிலை மனோபாவத்தை வலுக்கட்டாயமாக விதைக்க முனைகிறது.
சில நிரந்தர அடிமைகளை அவ்வப்போது அழைத்து சோறு கொடுக்கிறது தானே கலாசார மண்டபத்தை யாழில் கட்டி அது திறந்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் கையளிக்காமல் அதில் தாங்களே கூத்தாட்டமும் அவ்வப்போது நடத்துகிறார்கள். இது தான் அவர்களின் தமிழர் நலன் அதுமாத்திரமல்ல விமானப் போக்குவரவு. மின் கட்டமைப்பு வசதிகள் என வடகிழக்கை தமது பிடியுக்குள் அகப்படுத்தி வைத்திருக்கவே முயல்கிறது.
அவ்வப்போது அடிமைகளை அழைத்து சீனாவுக்கு எதிராக பேசவும் வைக்கிறார்கள் தற்போது இவர்களின் அடிமையாக வலம் வரும் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை வழிப்படுத்த சீன தமிழ் நட்புறவுச்சங்கம் தொடங்குவோம் என்று கூறியவர்.
எனவே அண்மையில் நடந்த சாந்தனின் இறப்பு விடயத்தில் கூடவே வந்த இந்திய சட்டத்தரணி புகழேந்தி பகிரங்க மாகமாகவே கூறினார் மத்திய மாநில அரசுகளின் கொலை என்று அது உண்மையும் கூட இவர்கள் நடந்து கொண்ட விதங்களில் அது தானாவே வெளிப்பட்டது சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துவதில் கூட பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியதாக அறிகிறோம் இந்திய அடிமை தமிழ் கட்சிகளின் பல தலைவர்கள் தலைமறைவு அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்திய விசுவாசிகள் கூட போகவில்லை.
கிழக்குமாணத்தவர்கள் எவரையும் காணக் கிடைக்கவில்லை. வழமையாக தமிழ்த்தேசிய நிகழ்வுகளை வலிந்து தமது தலையில் சுமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கூட பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக வர முதல் இருந்த இந்திய எதிர்ப்பு நிலையின் அதி தீவிரத்தன்மை தற்போது நலிவடைந்து விட்டது.
தமிழரசுக்கட்சியில் சிறிதரன் சாள்ஸ் ஆகியோரை தவிர வேறு எவரும் போனதாக தெரியவில்லை.ஆயுதக்குழுக்கள் எவரையும் காணவில்லை . பல்கலை மாணவருக்கும் பல இடர்பாடுகள் இருந்ததாக கேள்வி குறைந்த பட்சம் தமது அலுவலகங்களில் கூட அஞ்சலி செலுத்தவில்லை.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புக்கள் கூட ஒரு அறிக்கையோ அஞ்சலியோ செலுத்தியதாக தெரியவில்லை. மரணத்தில் கூட அரசியல் நோக்குநிலை தேடுபவர்கள் தான் தமிழ்த்தேசிய வாதிகளாம் சுய உணர்வற்ற அடிமைகள்.
ஆனாலும் மக்கள் இவர்களுக்கு மாறாக பெரு உணர்ச்சி பிரயோகத்தையே வெளிப்படுத்தினார்கள்.இதில் இருந்தாவதும் அடிமை அரசியல் வாதிகளும் இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களின் உண்மையான உணர்வுகளை. ஆகவே இந்தியா இலங்கை அரசின் பக்கமே தவிர பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் பக்கம் ஒரு போதும் இருந்ததில்லை.
ஏனெனில் தமிழர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தியதில் இந்தியாவுக்கும் பெரும்பங்குண்டு. இனப்பிரச்சினைக்கு தீர்வு பதின் மூன்றாவது திருத்தம் என்றார்கள். தற்போது பொருளாதார நெருக்கடி தீர்ந்தால் சரியாகும் என்கிறார்கள். ஆகவே இந்தியாவை விட ஆபத்தானவர்கள் இந்திய அடிமைகளே.
அவர்களை முதலில் தமிழ் மக்கள் அரசியல் அரங்கில் இருந்து அகற்ற வேண்டும். இதய சுத்தியோடு எதுமே செய்யாத இந்தியாவை ஏன் தான் இவர்கள் தாங்கிப் பிடிக்கிறார்களே தெரியவில்லை யாவும் டெல்லிக்கே வெளிச்சம் .
தொகுப்பு:-எஸ்.றொசேரியன் லெம்பேட்