“வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்று ஜேஎன்யு பல்கலை., மாணவர் தேர்தல் வெற்றிபெற்ற இடதுசாரி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இத் தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஎன்யு பல்கலை., மாணவர் பேரவைத் தலைவராக தனஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் வெற்றிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
“டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.
ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங்கின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், ஜே என் யு மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர்.
வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பாஜகவை வீழ்த்துவார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஞாயிறு இரவு 11.30 மணியளவில் தேர்தல் குழு முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் பெரும்பாலான பதவிகளுக்கான இடங்களிலும் இடதுசாரி குழு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு பதவிக்கான போட்டியில் மட்டும் ‘அம்பேத்கர் புலே மாணவர்கள் சங்கத்தின்’ வேட்பாளர் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதீய வித்யார்த்திந் எதப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை.
மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனஞ்சய், “எனக்குக் கிடைத்த ஆதரவை எண்ணி நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு மாணவர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர், மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது. ஜேஎன்யு வளாகத்தை எவ்வித பாகுபாடும் அற்ற, அனைவரையும் உள்ளடக்கிய வளாகமாக மாற்ற பாடுபடுவேன். மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமைக்காகப் போராடுவேன். அவர்களுக்கு ஏதுவான உள்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்க குரல் கொடுப்பேன். மேலும், கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.
தனஞ்சய் பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். நாடகம் மற்றும் செயல்திறன் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். தேர்தலில், தனஞ்சய் 2598 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏபிவிபி-யின் உமேஷ் சந்திரா ஆஜ்மீரா 1676 வாக்குகளைப் பெற்றார்.