மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறிய விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு முதல் முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
டில்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், ரூ. 100 கோடி கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டில்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் டில்லி முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் டில்லி போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள கைலாஷ் கெலாட்டுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. டில்லி மதுபான கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் தேர்தல் நேரத்தில் அக்கட்சிக்கு மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. டில்லி மதுபான கொள்கை வழக்கில் பிஎஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் கவிதா உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.