டில்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், கடந்த மாதத்தில் சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவை சமூக நலன்கள், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் புது கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உலகம் முழுவதும் இந்தியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகள், உலக மக்கள் தொகையில் கூட்டாக 49 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தலில் இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளது என்று மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்த விசயங்கள் தெரிய வந்துள்ளன. இதுபற்றி மைக்ரோசாப்டின் அச்சுறுத்தலை கண்டறிவதற்கான நுண்ணறிவு குழு கூறும் தகவலின்படி, சீனாவின் சைபர் குழுக்கள், வடகொரியா தொடர்புடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் பல்வேறு தேர்தல்களை இலக்காக கொண்டு செயல்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலின்போது, சீனா, தங்களுக்கு சாதகம் ஏற்படும் வகையில், தங்களுடைய விருப்பங்களுக்கு பலன் கிடைக்கும் வகையில், பொது மக்களின் கருத்துகளை மெல்ல சமூக ஊடகம் வழியே பரப்பி விடுவதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செய்திகளை அள்ளி குவிக்க கூடும் என்று தெரிகிறது என்று மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவால், வேட்பாளர்களின் அறிக்கைகள், பல்வேறு விவகாரங்களில் அவர்களின் நிலைப்பாடுகள் என பல விசயங்களை மக்களிடையே தவறாக வழிநடத்தும் வகையில் கொண்டு சேர்க்கும் தந்திரங்களை இலக்காக கொண்டு திட்டமிட்ட தாக்கம் ஏற்படுத்தப்படும். இந்த செய்திகள் ஆய்வு செய்யப்படாமல், அனுமதிக்கப்பட்டால் வாக்காளர்கள் சரியான முடிவு எடுக்காமல் போவதற்கான சாத்தியம் உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவின் உடனடி தாக்கம் மிக குறைவாக உள்ளபோதும், இதுபற்றிய சீனாவின் பரிசோதனை முயற்சி தொடர்ந்து அதிகரித்து வருவது வருங்காலங்களில் திறம்பட பாதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில், அது சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்றும் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிலும் தேர்தலின்போது, பிரசாரத்தில் தாக்கம் ஏற்படுத்த இந்த சீன குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. கென்டகியில் ரெயில் தடம் புரண்டது, மாவுய் காட்டுத்தீ, ஜப்பானிய அணுக்கழிவு நீர் வெளியேற்றம், அமெரிக்காவில் போதை பொருள் பயன்பாடு, குடியுரிமை கொள்கைகள் மற்றும் இனவெறி பதற்றங்கள் உள்ளிட்ட பல விசயங்களில் தாக்கம் ஏற்படுத்தவும், பிரிவினைகளை விதைக்கவும் செயற்கை நுண்ணறிவு விசயங்களை சீனா பயன்படுத்த முயற்சிப்பது அதிகரித்து வருகிறது என்றும் மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.