‛‛அமலாக்கத்துறை பணம் பறிக்கும் துறையாக மாறி உள்ளது” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் இதனை மேற்கோள் காட்டி ராகுல் பேசியதாவது:-
தெலுங்கானாவில் முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் செய்ததை, டில்லியில் பிரதமர் மோடி செய்து வருகிறார். அமலாக்கத்துறை, பணம் பறிக்கும் அமைப்பாக மாறி உள்ளது.காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பது தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். 40 ஆண்டுகள் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஆனால், தெலுங்கானா அரசு 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கி உள்ளது. இன்னும் 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில் பேசியிருப்பதாவது:-
நள்ளிரவில் இந்த காணொலியை பதிவு செய்துள்ளேன். ஆனால் இப்போது தான் அதை வெளியிட்டுள்ளேன். ஏனெனில், இது மக்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான ஒன்று. ஆம், ஒவ்வொரு இந்தியரின் குரலாகக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒலிக்கிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புரட்சிகரமான அறிக்கை என்று பலரும் பாராட்டியுள்ளனர். மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்த உங்களின் கருத்துகளை மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.