பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் பரிசு பொருட்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுக அளித்த புகாருக்கு திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்துள்ள பதிலின் விவரம் பின்வருமாறு: இரண்டு லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு கோடி ரூபாய் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது குறித்து இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து வழங்கப்படவில்லை. பத்து லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து வருமானவரித்துறை தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் நான்கு கோடி பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் நேர்மையான தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. திமுக வழக்கறிஞர் பிரிவு அளித்த புகார் மனுவிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.