இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவினர். ஆனால், இந்த ராக்கெட்டுகளை இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தாக்கி அழித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் இன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் யாரேனும் உயிரிழந்தனரா? காயம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. சிரியாவில் உள்ள தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.