பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டில்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி நிதியமைச்சர் அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என வாக்குறுதி அளித்தார். இன்று அதன் புள்ளி விவரங்களை கூட இந்த அறிக்கையில் கொடுக்க, அவர்கள் தயாராக இல்லை. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் மிக அதிகமாக உள்ளது. புள்ளி விவரங்களின்படி, 10 ஆண்டுகளில் பணவீக்கம் 70% அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் கூறியிருந்தார். இன்று அக்கட்சியின் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதற்கான எதுவும் இல்லை. மிக முக்கியமாக வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளை, பிரதமர் இன்று வரை சந்திக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி சென்ற விவசாயிகளை, கடுமையான தடுப்புகள் அமைத்து தடுத்தனர். 10 ஆண்டுகளில் பாஜக தன் அறிக்கைகளால் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. இன்று நாட்டின் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மக்கள் பணவீக்கத்தால் சிரமப்படுகின்றனர். பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.300-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்தது. பெட்ரோல் விலை ரூ. 75-லிருந்து ரூ. 100-ஐ எட்டியது. டீசல் விலை ரூ. 55-ல் இருந்து ரூ. 90-ஐ எட்டியது. குழந்தைகளுக்கு போதிய அரசு பள்ளிகள் இல்லை. குடிமக்களுக்கு சுகாதார வசதி இல்லை. எனவே பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மொத்த செலவு, டில்லியின் சுகாதார பட்ஜெட்டை விட குறைவாக உள்ளது.” இவ்வாறு டில்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.