சென்னை ஆவடியில் உள்ள கிருஷ்ணா ஜூவல்லரி நகைக்கடையில் 4 நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர். அவர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
சென்னை, ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் ஐஏஎப் சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இன்று பிற்பகலில் கடையில் பிரகாஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 4 பேர் கடைக்குள் புகுந்து, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், பிரகாஷின் கை, கால்களையும் கட்டிப்போட்டனர். பின்னர் கடையில் இருந்த சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக பிரகாஷ் காவல்துறையில் புகாரளித்தார். துப்பாக்கி காட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற 4 பேரின் சிசிடிவி காட்சி படங்களை வெளியிட்ட காவல்துறை, கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.