சீனா உடன் போட்டி போடும் வகையில், இந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தி வருவதாகவும், வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை குறைத்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க ஆயுதப்படைகளுக்கான நாடாளுமன்ற குழுவினரிடம், அந்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை இயக்குநர் ஜெனரல் ஜெப்ரி க்ரூசே கூறியதாவது: கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்தி இந்தியா தனது தலைமைப்பண்பை நிரூபித்தது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீன ராணுவத்தை எதிர்கொள்ளவும் விருப்பம் தெரிவித்து உள்ளது. 2023ல், சீனா உடன் போட்டி போடும் வகையில் இந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தவும், ரஷ்ய தயாரிப்புகளை சார்ந்து இருப்பதை குறைக்கவும் நடவடிக்கை எடுத்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை விமானத்தை சோதித்து பார்த்த இந்தியா, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 2024 ல் நாடாளுமன்ற தேர்தல், பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்தல், சீனாவுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை நவீனப்படுத்துதல், மேக் இன் இந்தியா ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.