அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் நிகழ்வு தொடர்கிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு, இளம் வயதினரின் உயிரை பறிக்கும் ‛ப்ளூவேல்’ விளையாட்டு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. குடும்பத்தினர் விருப்பப்படி அந்த மாணவரின் பெயர் மற்றும் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.
மாசசூசெட்ஸ் பல்கலையில் படித்து வந்த இந்த மாணவர், மார்ச் 8 ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கூறுகையில், இந்த வழக்கை தற்கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக கூறியுள்ளார். முன்னதாக உயிரிழந்த மாணவர், பாஸ்டன் பல்கலை மாணவர் என தவறாக அடையாளம் காணப்பட்டது. பிறகு கொள்ளை முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டு உடல் வனப்பகுதியில் இருந்த காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அங்கிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று, மாணவரின் பெயரை வைத்து அடையாளத்தை கண்டுபிடித்து கூறியது. உயிரிழப்பதற்கு முன்னர், அந்த மாணவர், தொடர்ந்து இரண்டு நிமிடம் மூச்சு விடாமல் இழுத்து பிடித்தபடி இருந்ததாக காவல்துறை கூறியுள்ளனர்.