யாழ்ப்பாணத்தில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் மூவருக்கு தொற்று உறுதியானது, இவர்கள் கொழும்பு – வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்தவர்கள் என்றும் குறித்த ஹோட்டல் நிர்வாகிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்தவுடன் யாழுக்கு திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் ஒருவருக்கும் உறுதியானது. இவர் கொழும்பில் பணிபுரிந்து யாழுக்கு திரும்பியவர்.
அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மருதனார்மடம் பகுதியில் வசிக்கும் தாயும் மகளும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது 10 வயது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.