-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.27:
பொது விடுமுறை, வார விடுமுறை, பள்ளிப் பருவ விடுமுறை, ஆண்டு விடுமுறை, தற்கால கொரோனா கால விடுமுறை என்றெல்லாம் விடுமுறைக் காலத்திலும்கூட வீட்டில் பணிச் சுமையுடன் இருப்பவர்கள் சாமுதாயத்தின் மாண்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள்தான்.
ஆவர்கள் தற்பொழுது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலிலிலும் அன்றாட அட்டவணைப்படி பாடங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு இணைய வகுப்புகளை நடத்தும்பொழுது, மாணவர் தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பும் அக்கறையும் வெளிப்படாததால், இனம்புரியாத சங்கடத்திற்கும் சஞ்சலத்திற்கு ஆளாகி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புலனக் குழுக்களின்வழி முன்னறிப்பு செய்துவிட்டு ஏற்பாடு செய்யும் இணைய வகுப்புகளில் இணையும் மாணவர் எண்ணிக்கை சராசரியாக கால் பங்கு என்னும் அளவிற்குத்தான் இருக்கிறது. 32 மாணவர்கள் கொண்ட வகுப்பிலிருந்து நேற்று காலை வகுப்பில் ஐந்து மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்று பத்துமலை, தாமான் ஸ்ரீ கோம்பாக் ஹில் கிரெஸ்ட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியரான மு.கலைவாணன் தெரிவித்தார்.
கல்வியில் அக்கறையும் எதிர்கால விழிப்புணர்வும் மிக்க மாணவர்கள் எந்த சுழ்நிலையையும் சமாளித்து வகுப்புகளுக்கு வருவதுடன், தனிப்பட்ட முறையிலும் நன்கு கற்று வருகின்றனர். இருந்தபோதும் இப்படிப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருக்கிறது.
எஸ்பிஎம் மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதிர்கொண்டுள்ள தேர்வில் அக்கறை காட்டி வருகின்றன. பொதுவாக, எஸ்பிஎம் மாணவர்கள், வெளியுலக வாழ்க்கைக்கு தங்களை அணியப்படுத்திக் கொண்டிருப்பதால் தங்களின் தேர்வில் முடிந்தவரை ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.
இதில், முதலாம் படிவத்தில் இருந்து 4-ஆம் படிவம் வரைப்பட்ட மாணவர்கள்தான், ஒருவித அலட்சிய மனநிலையில் காணப்படுகின்றனர் என்று இதேப் பள்ளியைச் சேர்ந்த இன்னோர் ஆசிரியையான திருமதி மோகனவள்ளி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருசில மாணவர்கள், தங்கள் விட்டில் இணைய வசதி இல்லாமலும் விவேக தொலைபேசி இன்றியும் சிரமப்படுகின்றனர் என்பது உண்மைதான். அப்படிப்பட்ட மாணவர்களை நினைத்து கவலையாக இருக்கிறது. அதேவேளை, பெரும்பாலான மாணவ – மாணவியருக்கு இந்தச் சிக்கல் இல்லை. இருந்தபோதும் வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
இன்னும் சில மாணவர்கள், இணைய வகுப்பு தொடங்கும் நேரத்தில் வந்து கலந்து கொண்டுவிட்டு, பின்னர் கணினியையோ அல்லது திறன்பேசியையோ நிறுத்திவிட்டு வேறு வேலையில் கவனம் செலுத்துகின்றனர். வேறு சில மாணவர்கள், ஆரம்பத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். பாடத்தின் இடையிடையே ஏதும் கேள்வியோ விளக்கமோ கேட்டால் மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. பெற்றோர், தங்களின் சிரமத்திற்கு இடையே பிள்ளைகளுக்கு தேவையான வசதியை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் அதை வகையாக பயன்படுத்த அதிகமான மாணவர்கள் தவறி வருகின்றனர்.
இதன் தொடர்பில், பெற்றோர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
விட்டிலிருந்தபடி இணைய வகுப்பில் கலந்து கொள்ளும் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினால் நல்லது என்று ஸ்ரீ சிப்பாங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் தயாளன் சன்னாசி கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், பிடி3 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் நான்காம் படிவத்திற்கு செல்லவிருக்கின்ற நிலையில் அவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது என்பதன் தொடர்பில் ஆசிரியர்களும் பள்ளி நிருவாகமும் ஒரு தேக்க நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
நான்காம் படிவத்தில் கல்வியைத் தொடரும் மாணவர்கள், அறிவியல் பிரிவு, கலைப் பிரிவு மற்றும் கணக்கியல் பிரிவு என பெரும்பாலும் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்படுவர். அதற்கு ஏதுவாக, அவர்களின் பிடி3 தேர்வு முடிவு அளவுகோலாகப்பயன்படுத்தப்படும்.
இந்த ஆண்டு இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் பிபிடி(Pentaksiran Bilik Darjah)என்னும் வகுப்பறை மதிப்பிட்டைக் கொண்டுதான் அவ்வாறு செய்ய வேண்டுமா என்பதுகூட இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று மோகனவள்ளி இதன் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
எது எவ்வாறாக இருந்தாலும், இந்திய சமுதாய மாணவர்கள், கல்வி ஒன்றுதான் தங்களின் எதிர்கால ஒளிவிளக்கு என்பதை உணர்ந்து, தத்தம் ஆசிரியர்களின் பார்வையில் இருந்து விலகி இருந்தாலும் பொறுப்புடன் கல்வியில் அக்கறை செலுத்தி வரவேண்டும் என்று இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24