“பலஸ்தீனியர்கள் இன்னும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் சிவில் நிர்வாகம், வன்முறை, குண்டுவெடிப்பு மற்றும் இஸ்ரேலிய குடியேற்றங்களின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் விளைவாக அவர்களின் மனிதாபிமான மற்றும் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இது தவிர சுதந்திர பலஸ்தீனத்திற்காக தமது வாழ்நாளை தியாகம் செய்தவர்கள் அதிகமாகும்.
2015ஆம் ஆண்டாகும்போது பலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை 5.6 மில்லியன் ஆகும். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மொத்த பலஸ்தீன மக்கள் தொகையில் அரைவாசி பேர் அகதிகளாக தங்களது இடங்களிலிருந்து வெளியேறி வாழ்ந்து வருகின்றனர்.
பலஸ்தீனம் தொடர்பான பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றுடன் இணைந்ததாக விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள நீண்டகாலமாக தீர்க்கப்படாத நெருக்கடிகளில் இதுவும் ஒன்றாகும்……… பலஸ்தீன விடுதலை அமைப்பு எனும் பெயரில் பலஸ்தீனத்தை காப்பாற்றும் அமைப்பொன்றை முதல் முறையாக இலங்கைக்குள் நிறுவும்போது அதன் தலைமை பொறுப்பை எனக்கு வழங்குவதன் மூலம், பலஸ்தீனத்திற்காக மேற்கொண்ட தலையீட்டை பாராட்டி பலஸ்தீனத்தின் உயரிய விருதான பலஸ்தீன நட்சத்திரம் விருது எனக்கு வழங்கப்பட்டமையை இன்று நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.
இலங்கை மற்றும் பலஸ்தீன அரசாங்கத்திற்கு இடையிலான உறவு சிறப்பானதாகும். பலஸ்தீன அரசாங்கத்திற்கும், பலஸ்தீனத்தின் நட்புணர்வு கொண்ட மக்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவதில் நாம் உறுதியுடன் செயற்படுவோம்.
பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.” இவ்வாறு தெரிவித்திருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? அவர்தான் இலங்கைத் தீவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச. கடந்த மாதம் 29 ஆம் திகதி சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான நாளை முன்னிட்டு அவர் விடுத்த செய்தி அது.
இதில் அவர் பலஸ்தீனத்தின் இறையாண்மையை அங்கீகரிக்கிறார். ஆனால் இவ்வளவையும் அறிக்கையாக விடும் மகிந்த தமது நாட்டில் உள்ள ஒரு சிறிய தேசிய இனத்தை நாட்டின் சக நிர்மாணிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவருடைய அரசாங்கம் அந்த சிறிய தேசிய இனத்துக்கு கடந்த வாரம் நினைவுகூரும் உரிமையைக் கூட வழங்க மறுத்தது.
மஹிந்தவின் அறிக்கையில் உள்ள கவர்ச்சியான புரட்சிகரமான வார்த்தைகளை பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அது ஓர் அக முரண்பாடுள்ள அறிக்கை. ராஜபக்சக்கள் சொந்த நாட்டில் சிறிய தேசிய இனங்கள் தொடர்பாக முன்னெடுக்கும் அரசியலுக்கும் வெளியுலகில் பலஸ்தீனர்கள் விடயத்தில் அவர்களுடைய நிலைப்பாட்டுக்கும் இடையில் இருக்கக்கூடிய பாரதூரமான இடைவெளி என்பது ஒரு அக முரண்பாடுதான். ஆனால் ராஜ்ய உறவு எனப்படுவது இவ்வாறு அக முரண்பாடுகளை கொண்டதுதான். இன்னும் கூர்மையாக சொன்னால் ராஜிய உறவுகள் அல்லது அனைத்துலக உறவுகள் அல்லது நாடுகளுக்கும் நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புனிதமானவை அல்ல. கொள்கை ரீதியானவையோ அல்லது நீதி நரிகளின் பாற்பட்டவையோ அல்ல. அரசு ஓர் உயிரி அல்ல. எனவே அதற்கு இதயம் கிடையாது. இதயம் இல்லாத ஒன்று இதையமில்லாத மற்றொன்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுது அங்கே நலன்கள் மட்டுமே பார்க்கப்படும். அது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தேவை கருதிய உறவுதான்.
ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். அனைத்துலக அரங்கில் பலஸ்தீனர்களை ஆதரிப்பதால் இலங்கைக்கு என்ன கிடைக்கப் போகிறது? இலங்கை அரசாங்கத்துக்கு பலஸ்தீனர்களின் தார்மீக ஆதரவும் மகிந்த ராஜபக்சவுக்கு விருதும் வழங்குவதைத் தவிர வேறு எதைத்தான் பலவீனமான பலஸ்தீன மக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தரமுடியும்? எதையும் தரமுடியாது. எனினும் மஹிந்த ராஜபக்ச பலஸ்தீனத்தின் இறமையை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதன் மூலம் உலகத்துக்கு தான் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருப்பதாகக் காட்டவிளைகிறாரா? குறிப்பாக நாட்டில் முஸ்லிம்களின் இறந்த உடலுக்குள்ள பண்பாட்டு உரிமையை மறுக்கும் ஒருவர் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதை எப்படிப் பார்ப்பது?
மாறாக இஸ்ரேல் அதாவது பலஸ்தீனத்தின் பொது எதிரியான இஸ்ரேல் இலங்கை அரசாங்கத்துக்கு போர்த் தளபாடங்களை வழங்கும் ஒரு நாடு. குறிப்பாக யுத்த காலத்தில் கிபிர் என்று அழைக்கப்பட்ட குண்டு வீச்சு விமானத்தை அந்நாடு வழங்கியது. யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் கூட்டாளிகளில் இஸ்ரேலும் ஒன்று. பலஸ்தீனத்தின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத பலஸ்தீனர்களின் இருப்பை படிப்படியாக அழிக்க முற்படுகின்ற அதன் எதிரி நாட்டோடு நெருக்கமான உறவை வைத்திருக்கும் அதேநேரம் பலஸ்தீனர்களின் இறமை பற்றி ராஜபக்ச பேசுவதும் ஓர் அக முரண் தான்?
இதே அக முரணை கியூபாவிலும் காணமுடியும். அமெரிக்க எதிர்ப்புக்கு மத்தியில் தனித்து நின்று தன்னை நிரூபித்த ஒரு நாடு கியூபா. அண்மையில் covid-19 நெருக்கடிக்குள்ளும் கியூபா தன்னுடைய மனிதாபிமானத்தை நிரூபித்திருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களின் விடயத்தில் கியூபா எப்பொழுதும் இலங்கை அரசாங்கத்தின் பக்கமே நின்றிருக்கிறது. ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற படுகையில் கியூபா அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது. அதுமட்டுமல்ல தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளை நோக்கி தர்க்கபூர்வமான கேள்விகளையும் கேட்டிருக்கிறது. ஒருமுறை ஜெனிவாவில் கியூப பிரதிநிதி மேற்கத்திய நாடுகளை நோக்கி பின்வருமாறு கேட்டார் “போரில் ஈடுபட்ட இலங்கைக்கு கிட்டத்தட்ட 60 வீதமான ஆயுதங்களை வழங்கிய நீங்களே இப்பொழுது போர்க் குற்றம் பற்றி பேச வருகிறீர்கள்” என்று.
கியூபா கூறும் தார்மீகம் ; சமூக நீதி போன்றவற்றின் அடிப்படையில் அந்நாடு ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் பக்கம்தான் நிற்க வேண்டும். ஆனால் நடைமுறை அப்படியல்ல. ஏனென்றால் அது நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் பிரகாரம் ஏற்பட்டது. இந்த இடத்தில் கியூபா அது கூறும் சமூக நீதிகளின் படி நடந்து கொள்ளவில்லை. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவினூடாகவே அது இலங்கை தீவை அணுகி வருகிறது.
இதுபோல மேலும் ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். 1971இல் ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஜேவிபி தலைவர்கள் யாழ் கோட்டையும் உட்பட ஏனைய இடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். அச்சிறைகளில் ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த ஒரு படை அதிகாரி கைதிகளாக இருந்த ஜேவிபிக்காரர்களிடம் உங்களுக்கு வாசிக்க என்ன வேண்டும் என்று கேட்டிக்கிறார். அவர்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து கொடுத்திருக்கிறார்கள். அவை யாவும் சீனாவில் அச்சடிக்கப்பட்ட சீன கொம்யூனிஸ்ட் தத்துவங்களைக் கூறும் நூல்கள் ஆகும். அந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கைதிகளுக்கு வழங்கிய அந்த அதிகாரி தன் கையில் இருந்த ரி-56 துப்பாக்கியை காட்டி பின்வருமாறு சொன்னார் “உங்களுக்கு சீனா இந்தப் புத்தகங்களை தருகிகிறது. எங்களுக்கு இந்தத் துப்பாக்கியைத் தருகிறது” என்று.
இதுதான் கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள குரூரமான இடைவெளி. அனைத்துலக அரங்கில் நாடுகளுக்கு இடையிலான உறவில் இந்த அக முரணுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம்.
ஈழத் தமிழர்கள் இந்த அக முரண்பாடுகளை விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலை வெளியுறவுகளை இலட்சிய வாதத்திற்கூடாகவோ அறநெறிகளுக்கூடாகவோ இதயத்தாலோ அணுக முடியாது. அதாவது தொகுப்பாக சொன்னால் அது இதயங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. மாறாக அது முழுக்க முழுக்க புத்தி பூர்வமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த பேர அரசியல்தான். எனவே ஈழத்தமிழர்கள் இப்படிப்பட்ட அனைத்துலக உறவுகளுக்குள் தங்கள் பேரத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பலஸ்தீன உதாரணத்தையே சுட்டிக்காட்டி இக்கட்டுரையை முடிக்கலாம். அதாவது 83 ஜூலைக்குப் பின் தமிழ் இயக்கங்களில் பெரும்பாலானவை இந்தியாவை நோக்கி சென்றன. எனினும் அக்காலப்பகுதியில் சில தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்கள் பலஸ்தீனத்திற்கு போனார்கள். அங்கே அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பலஸ்தீன விடுதலை இயக்கங்களின் விடுதலை பிரதேசங்களில் அவர்கள் படைத்துறைப் பயிற்சியைப் பெற்றார்கள். இவ்வாறு பயிற்சி பெற்ற உறுப்பினர்களை பிஎல்லோ ட்ரெயினிங் முடித்தவர்கள் என்று அந்த காலங்களில் அழைப்பார்கள். குறிப்பாக புலிகளல்லாத இயக்கங்கள் இவ்வாறு பலஸ்தீனத்திற்கு உறுப்பினர்களை அனுப்பி எடுத்தன. அதாவது இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்பு பலஸ்தீனம் ஈழ விடுதலை இயக்கங்களின் நட்பு சக்தியாக இருந்திருக்கிறது. ஆயுதப் பயிற்சி வழங்கும் அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது. அந்த உறவு எப்படி விடுபட்டது?
இந்தக் கேள்விக்கு ஈழத்தமிழர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்கு இப்பொழுது யார் யார் நண்பர்கள் என்று தொகுத்துப் பார்க்க வேண்டும். 2009 மே மாதம் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பொழுது அதைத் தனியே இலங்கை அரசாங்கம் மட்டும் செய்து முடிக்கவில்லை. வெளி அரசுகளின் உதவியின்றி அந்த வெற்றி கிடைத்திருக்காது. அதிலும் குறிப்பாக பிராந்தியத்தில் எதிராக காணப்படும் சீனா,இந்தியா,அமெரிக்கா,பாகிஸ்தான் போன்ற நாடுகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு கோட்டில் நிறுத்தும் அளவுக்கு ராஜபக்சக்கள் நிலைமையை புத்திசாலித்தனமாகக் கையாண்டார்கள். சிங்கள மக்கள் அரசுடைய தரப்பு என்பது மட்டும் அதற்கு காரணம் இல்லை.
தமிழ் மக்கள் ஓர் அரசற்ற தரப்பு என்ற நிலையிலிருந்து ஒரு தேச உருவாக்கத்தை நோக்கி நண்பர்களை சம்பாதிக்த் தவறியதை அது காட்டுகிறது. கணியன் பூங்குன்றனாரின் தீர்க்கதரிசனமான கவிதா வரிகளின்படி ஈழத் தமிழர்கள் யாதும் ஊராகச் சிதறிச் சென்று விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு யார் யார் கேளீர் ?