புரேவி சூறாவளியின் தாக்கத்தின் காரணமாக வன்னியில் கடுமையாக பெய்துவரும் மழையால் பல குளங்களின் நீர்மட்டங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குளங்களும் கிளிநொச்சியில் ஒரு குளமும் வான் பாய்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கணுக்கேணிக்குளம் (முறிப்புக்குளம்), புதுக்குயிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மருதமடுக் குளம் என்பன வான்பாய்கின்றன.
அதேபோல கிளிநொச்சியில் குடமுருட்டிக் குளமும் வான் பாய்வதாக கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனால் குறித்த குளங்களின் நீரேந்து பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
கனகாம்பிகைக்குளம் 9 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. சூறாவளித் தாக்கத்தின் பின்னான இரண்டாம் கட்ட மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தொடர்ந்தும் மக்களை அவதமானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெய்த கடும் மழை காரணமாக வன்னியில் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றரைத் தாண்டிய மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக தெரியவருகிறது