லங்கைக்குச் செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் தற்போது நிர்மானிக்கப்பட்டு வரும் பறவை பூங்காவின் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் மற்றும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களின் ஒப்புதல் மற்றும் மேம்பாட்டு திட்டமிடல் வழிகாட்டுதல்களின்படி முதலீட்டாளர் இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கட்டுமானத்தையும் பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்படி பறவைகள் பூங்கா கட்டுமானம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு பறவைகள் பூங்கா நிர்மாணப் பணிகளை நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, திண்மக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமூக சுகாதாரத் துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை அறிக்கை மற்றும் அரசாங்க அபிவிருத்தித் திட்டத்தின்படி கொழும்பு நகரமும் அதன் சுற்றுப்புறங்களும் இன்று ஒரு முக்கிய சுற்றுலா பிரதேசங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஈரநில பூங்காக்கள், நகர்ப்புற வன பூங்காக்கள் மற்றும் நகர்ப்புற விவசாய பூங்காக்கள் உட்பட நகர்ப்புற வளர்ச்சி, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் சமூக சுகாதாரம் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல திட்டங்களை நகர அபிவிருத்தி கடலோர பாதுகாப்பு, திண்மக் கழிவுகளை அகற்றல் மற்றும் சமூக சுகாதாரத் துறை இராஜாங்க அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றிணைந்து கொழும்பு பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.
அதன் ஒரு கட்டமாக கொழும்பு பறவைகள் பூங்கா அபிவிருத்தி செயற்றிட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒரு புதிய சுற்றுலா அனுபவத்தை வழங்கும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில் கொழும்பு பறவை பூங்கா அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறவைகள் பூங்காவின் அடிக்கல் நாட்டு விழா இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிரினிமல் பெரேரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த திட்டத்திற்காக மாதிவெலாவில் 39 ஏக்கர் சதுப்பு நிலத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது சதுப்பு நிலத்திற்கு அருகிலுள்ள சில குடியிருப்பாளர்களால் சட்டவிரோதமாக கையகப்படுத்துதல், கழிவுகளை கொட்டுதல் மற்றும் ஈரநிலங்களுக்கு வடிகால் அமைப்புகளை இணைத்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத நில நிரப்புதல் காரணமாக ஈரநிலம் பெரும் அச்சுறுத்தலுக்கும் அழிவுக்கும் உள்ளாகிறது.
எனவே, இந்த ஈரநிலத்தைப் பாதுகாப்பதற்காகவும், தியவன்னா ஓயாவுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த ஈரநிலத்தின் வழியாக கால்வாய்களை நேரடியாகப் பாய்ச்சுவதற்காகவும், கொழும்பு பறவை பூங்கா திட்டம் மாதிவெல ஈரநிலத்தை மையமாகக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா ‘நாங்கள் இன்று தொடங்கிய பறவை பூங்கா திட்டத்தை எதிர்காலத்திற்காக உருவாக்குகிறோம். குறிப்பாக நம் நாட்டு மக்களை மட்டுமல்ல, எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை இத்திட்டம் ஈர்க்கும் என்று நம்புகிறோம். இலங்கையிலிருந்து கொரோனாவை ஒழிக்க மிக வெற்றிகரமான திட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வேளையில் இது தொடர்பாக கூறினார். செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு 13 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும். மேலும், இலங்கையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் திட்டங்களும் உள்ளன. எதிர்காலத்திற்காக நாம் தயாராக வேண்டும். எதிர்காலத்தை வெற்றி பெற எங்கள் அமைச்சு பாடுபடுகிறது. ஜனாதிபதி ஒரு வருடத்திற்கு ரூ. 750 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மக்களுக்கான நிவாரணத்திற்காக ஒதுக்குகிறார்’ என்று சுட்டிக் காட்டினார்.
“நாட்டில் ஒரு பெரிய வளர்ச்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் எதிர்காலத்திற்காக பாடசாலைகள், வீதிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க நாம் வருமானம் ஈட்ட வேண்டும். வருமானம் ஈட்டக் கூடிய விஷயங்களை நாம் செய்ய வேண்டும். வருமானம் ஈட்ட நாம் முதலீடு செய்ய வேண்டும். அதனால்தான் நாங்கள் பல திட்டங்களைச் செய்கிறோம்.
இந்த நேரத்தில் நமக்குத் தேவைப்படுவது தன்னம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன் நாங்கள் செயல்பட்டால், எதிர்காலத்தில் நாம் அபிவிருத்தியைப் போலவே இந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும்’ என கலாநிதி நாலக்க கொடஹேவா மேலும் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு தனியார் துறையைப் பயன்படுத்துவதன் மூலம் நாடு முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
ஜனாதிபதியைப் போலவே இராஜாங்க அமைச்சரும் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரும் நன்மை தரக் கூடிய ஒரு திட்டத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்தினோம். இந்த 35 ஏக்கரில் மட்டும் கிட்டத்தட்ட 9000 வகையான மதிப்புமிக்க மரக்கன்றுகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இந்த பகுதியில் மேலும் சுமார் 9000 மதிப்புமிக்க மரங்களை நடுகை செய்கிறோம். இப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் போத்தல்களை அகற்றி இந்த 35 ஏக்கரை எதிர்காலத்தில் எமது குழந்தைகள் அனுபவிக்கக் கூடிய நல்லதொரு சுற்றுபுற சூழலாக உருவாக்குவோம் என நம்புகிறோம். இதுதான் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயல்பாடு. நகர அபிவிருத்தி அதிகாரசபை பொது திறைசேரியில் இருந்து பெறப்பட்ட ரூபா 03 பில்லியனை தாண்டிய பணிகளை செய்துள்ளது. அதையும் மீறி தனியார் துறை முதலீட்டாளர்களைக் கொண்டு இந்த பெறுமதி வாய்ந்த செயற்திட்டத்தை செய்வோம். இந்த ஆண்டு மட்டும் ரூ.104 பில்லியன் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார மதிப்பின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம். இத்தகைய திட்டங்களை தனியார் துறையின் பங்களிப்புடன் செயல்படுத்த முடிந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முழு மேற்பார்வை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் காணி அபிவிருத்தி கழகம் போன்ற தொடர்புடைய நிறுவனங்களின் அனைத்து சட்ட அமைப்புகளுக்கும் உட்பட்டு இந்தத் திட்டம் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று நம்புகிறோம்’ என நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டளவில் கொழும்பு நகரத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான கொழும்பு பறவை பூங்காவை மிக முக்கியமான மையமாக மாற்றுவதே நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முக்கிய நோக்கமாகும்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் மற்றும் உலகின் முக்கிய சுற்றுலா பூங்காக்களின் சமீபத்திய விளையாட்டு அம்சங்களுடன் இந்த பூங்கா சூழல் தீங்கு விளைவிக்காத வண்ணம் முறையில் கட்டப்படும். பறவைக் காட்சிகள், அழகான மற்றும் உள்ளுர் பறவைகள் ஆய்வு, நீர் பூங்காக்கள், வன பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் (சிற்றுண்டிச்சாலை) ஆகியவற்றைக் கொண்ட இந்த பூங்காவை ஒரு முழுமையான ஆய்வு பூங்காவாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மொத்த செலவு 1.5 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டவுடன் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை அதிகளிவில் வரவேற்பதற்கான மேலதிக திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது