யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் யாழ்ப்பாணத்தின் வாள்வெட்டுக் கலாச்சாரம் ஓயவில்லை. அன்மையில் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இரண்டு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது. ஒரு அணியில் இருந்து பிரிந்து சென்ற இன்னொரு அணி தனக்கென்று பாடல்களை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பாடல்களை உருவாக்கிய ஸ்டூடியோதான் தாக்குதலின் இலக்கு. இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களைக் கைது செய்தபொழுது கைப்பற்றிய ஆயுதங்கள் தமிழில் தெய்வப் படங்களில் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்படும் பழையகால ஆயுதங்களை போன்றவை. அந்த ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு தாங்கள் செய்வது ஒரு சாகசச் செயல் என்று நம்பி அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்.தாங்கள் செய்வது ஒரு குற்றச்செயல் என்பதை உணராமல் அதை ஒரு சாகச செயலாகக் கருதி அதற்கென்று பாடலையும் உருவாக்குகிறார்கள். ஆயின் இதை எப்படி விளங்கிக் கொள்வது?
தாங்கள் செய்வது குற்றமா சாகசமா என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கு யார் அதை விளங்க படுத்துவது ? நிச்சயமாக அவர்களுடைய பெற்றோர்களால் அது முடியாது. ஏனென்றால் அவர்கள் செய்வதை தடுக்கும் சக்தி தாய் தகப்பனுக்கு இருந்திருந்தால் அவர்கள் இப்படி வாட்களை ஏந்திக்கொண்டு வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கோ அல்லது அவர்களுக்கு போதிக்கும் மதகுருக்களுக்கோ கிடையாது. அல்லது அவர்கள் பிறந்து வளர்ந்த கிராமங்களில் கருத்தை உருவாக்கவல்ல சமூகத் தலைமைகள் அல்லது உள்ளூர் தலைமைகளாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள் பெற்றோர் மதகுருக்கள் உள்ளூர் தலைவர்கள் போன்றவர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வளர்ச்சிக்கு அவர்கள் போய்விட்டார்கள். அது ஒரு விகார வளர்ச்சி. மேல் சொன்ன யாருடைய செல்வாக்கின் கீழும் அவர்கள் இல்லை என்று தெரிகிறது.
அப்படியென்றால் அவர்களை சட்டத்தால் மட்டும் கையாள முடியுமா? இல்லை.கடந்த 12 ஆண்டுகளாக சட்டத்தால் அவர்களை பொருத்தமான விதங்களில் கையாளவோ அடக்கவோ முடியவில்லை என்பதைத்தான் பார்க்கிறோம். இதுதொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் வேறு அபிப்பிராயங்கள் உண்டு. மேற்படி குழுக்கள் தமிழ்ச் சமூகத்தை சீரழிக்கும் உள்நோக்கமுடைய தரப்புகளால் உற்பத்தி செய்யப்படுவதாக ஓரூகம் பரவலாக உண்டு. இக்குழுக்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை போதிய அளவுக்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. எனினும் கோண்டாவில். சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையும் அரச படைகளும் இணைந்து துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஆனாலும் இக்குற்றச்செயல்களில் பின்னணியில் அரசியல் நோக்கங்களைக் கொண்ட சக்திகள் இயங்குவதாக பொதுவாக ஒரு சந்தேகம் யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் இளையவர்களை இலட்சியவாதத்தின் பக்கம் போகவிடாது தடுத்து திசைதிருப்பும் நோக்கில்தான் இப்படிப்பட்ட குழுக்கள் ஊக்குவிக்கப் படுகின்றன அல்லது கண்டும் காணாமல் விடப்படுகின்றன என்று ஒரு பலமான சந்தேகம் யாழ்ப்பாணத்தில் உண்டு. போதைப்பொருள் வலைப்பின்னலையும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஒரு விளக்கம் உண்டு.
விளக்கங்கள் வியாக்கியானங்கள் எப்படியும் இருக்கலாம்.ஆனால் எல்லாவிதமான வியாக்கியானங்களுக்கும் விளக்கங்களுக்கும் அப்பால் இது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பாரதூரமான வீழ்ச்சியை காட்டுகிறது. கடந்த வாரம் யாழ்ப்பான பத்திரிகைகளில் அல்லது சமூக ஊடகங்களில் அதிகம் துருத்திக்கொண்டு தெரிந்த செய்திகள் இரண்டு.
ஒரு செய்தி மேற்சொன்ன வாள்வெட்டுச் செய்தி. இரண்டாவது செய்தி அந்த சம்பவத்தில் வெட்டப்பட்ட கையை உடலோடு மறுபடியும் சேர்த்து தைத்த ஒரு மருத்துவ சாதனை பற்றிய செய்தி. இந்த இரண்டும் ஒரே சமூகத்தில்தான் இடம் பெற்றன. ஒருபுறம் வாளேந்திந்திய இளைஞர்கள். இன்னொருபுறம் வெட்டிய கையை சேர்த்துத்தைத்த மருத்துவர்கள். ஒன்று குற்றச்செயல். மற்றது நற்செயல். இவை இரண்டினதும் சேர்க்கைதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்.
ஆனால் துயரம் என்னவென்றால் இந்த இரண்டு செய்திகளையும் பரபரப்பான சூடான செய்திகளாக பார்த்துவிட்டு சமூகத்தின் பெரும்பாலான தரப்பு அவற்றைக் கடந்து சென்று விடுவதுதான். உண்மையில் இவை இரண்டும் யாழ்ப்பாணச் சமூகத்தின் முரண்பாட்டை மட்டும் காட்டவில்லை. அவற்றுக்கு மேலாக தன்னை ஒரு பண்பாட்டு தலைநகரம் என்று கூறிக்கொள்ளும் ஒரு குடாநாட்டின் அறிவு,விழுமியம், பண்பாட்டுச் செழிப்பு, தலைமைத்துவம் போன்ற எல்லாவற்றின் மீதும் கேள்விகளை எழுப்பும் ஒரு அகமுரண்பாடு இது. ஏனெனில் மேற்படி இளையோர் அவற்றை குற்றச் செயல்களாக கருதி செய்யவில்லை. அவர்கள் அதை இப்பொழுதும் சாகச உணர்வுடன்தான் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த சாகச உணர்வை நெறிப்படுத்தி அதனை இலட்சியங்களை நோக்கி திருப்ப சமூகத்தில் யாருமே இல்லையா ?
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரும் தொற்றுநோய் சூழலிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டார்கள். கறுப்பு துணியில் P2P என்று பொறிக்கப்பட்ட பட்டியைக் கட்டிக்கொண்டு சிவப்பு மஞ்சள் கொடிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தது ஒரு தொகுதி இளையவர்கள்தான். அந்த ஊர்வலங்களை பார்த்தும் ஒரு செயற்பாட்டாளர் கேட்டார். இதிலும் ஒரு சாகச உணர்வு தெரிகிறது. இந்த சாகச உணர்வை அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற வேண்டுமென்று. இதே விளக்கம் வாளேந்திந்திய இளைஞர்களுக்கும் பொருந்தும். அதை நாங்கள் குற்றமாக பார்க்கப் போகிறோமா அல்லது வழிதவறிய சாகச உணர்வாக பார்க்கப் போகிறோமா?.
அவர்களுக்கு தலைமை தேவையாக இருக்கிறது.அவர்களை அரவணைத்து அவர்களுடைய இளம் இரத்தத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தலைமைதாங்கி அவர்களை இலட்சியப் பாங்கான வழிகளில் வழிநடத்த தலைவர்கள் இல்லை என்பதே இங்குள்ள பிரச்சினை. உண்மையிலேயே வாளேந்திந்திய இளைஞர்களின் தோற்றம் என்பது தலைமைத்துவ வெற்றிடத்தில் இருந்துதான் வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான தலைமைகள் இல்லாத ஒரு வெற்றிடத்தில் தான் ஒரு சிறு தொகுதி இளையோர் இவ்வாறு வழிதவறிப் போகிறார்கள்.
கடந்த 12 ஆண்டுகளாக இவ்வாறு வழிதவறிய இளையோருக்கு தலைமை தாங்க தவறியதற்கு சமூகத்தின் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த இளையோர் எங்களுக்குப் புறத்தியானவர்கள் அல்ல. அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து வேற்று நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்ளுடைய பிள்ளைகள். எங்களுடைய வீடுகளில் எங்களுடைய பள்ளிக் கூடங்களில் எங்களுடைய சனசமூக நிலையங்களில் எங்களுடைய விளையாட்டு மைதானங்களில் எங்களுடைய சந்தைகளில் எங்களுடைய ஆலயங்களில் எங்களுக்கு மத்தியில் எங்களால் வளர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்றைக்கு வாள் எந்துகிறார்கள் என்று சொன்னால் அதற்கு நாங்கள் எல்லாருமே பொறுப்புதான். யாரோ அவர்களுக்கு வாளைக் கொடுக்கிறார்கள் கஞ்சாவை கொடுக்கிறார்கள் என்று சூழ்ச்சி கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக அந்த இளையோருக்கும் எங்களுக்கும் இடையிலான தொடர்பாடல் எங்கே அறுந்தது என்பதை முழுச் சமூகமும் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே யாரோ ஒரு வெளியாள் வாளை,கஞ்சாவை கொண்டுவர முடிகிறது என்றால் உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பாடல் இடைவெளி இருக்கிறது என்றே பொருள். உங்களுடைய பிள்ளை எங்கே போகிறான்? யாரை சந்திக்கிறான்? என்னென்ன செய்கிறான்? எப்பொழுது திரும்பி வருகிறான்? ஏன் பிந்தி வருகிறான்? அவனுடைய கைபேசியில் யார் யாருடைய இலக்கங்கள் உண்டு? கைபேசியில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது ? அவனுடைய கணினியில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது? அவனுடைய முகநூலில் அவன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் எத்தகையது ? என்பது குறித்து எங்களில் எத்தனை பேர் நுணுக்கமாக பின்தொடர்கிறோம்?எங்களுக்கும் எங்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே எங்கே எப்பொழுது இடைவெளி விழுந்தது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.இது எல்லா பெற்றோருக்குமான ஒரு பொறுப்பு. ஆசிரியர்களுக்குமான பொறுப்பு. உள்ளூர் தலைமைகளுக்கும் மதத் தலைவர்களுக்குமான பொறுப்பு. எல்லாவற்றையும்விட முக்கியமாக அரசியல் தலைவர்களுக்கான பொறுப்பு.
ரத்தத்துடிப்புள்ள இளையவர்களுக்குத் தலைமைதாங்க தகுதியுள்ள தலைவர்கள் யார் உண்டு ?எத்தனை கட்சிகளிடம் இளையோர் அமைப்புகள் உண்டு? குறைந்தபட்சம் பல்கலைக்கழகங்களில் மாணவ அமைப்புக்களைக் கொண்டிருக்கும் கட்சிகள் எத்தனை? இதுதான் பிரச்சினை. இளையோரின் வேகத்துக்கு தாக்குப் பிடித்து தலைமை தாங்க தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரால் முடியவில்லை என்பதுதான். இளையோரின் சாகச உணர்வுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுத்தால் அது ஆக்க சக்தியாக மாறும். அதற்கு ஒரு அரசியல் தரிசனம் வேண்டும்.
இளையோருக்கு மட்டுமல்ல முழுச்சமூகத்துக்குமே ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் சமூகமுடக்க காலத்தில் வழிகாட்டுவதற்கு எத்தனை தலைவர்கள் உண்டு ? கடந்த சில வாரங்களாக இதுபற்றி நான் அடிக்கடி எழுதி வருகிறேன். சமூகமுடக்கத்தின்போது பொது மக்களோடு சேர்ந்து முடங்கி கிடப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. அல்லது பெருந்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை முழுக்க முழுக்க படையினரிடம் ஒப்படைத்து விட்டு வீடுகளில் முடங்கி கிடப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை. மாறாக மக்களுக்கு விழிப்பூட்டி வேண்டும். தைரியம் ஊட்ட வேண்டும். நோய் தொற்றுக்கு எதிராக உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களை பலப்படுத்த வேண்டும். வழிகாட்ட வேண்டும்.
ஒரு பகுதி அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் நிவாரணம் வழங்குவதில் மினக்கெடுகிறார்கள். அதற்கும் தேவை உண்டு. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளையும் தாயக மக்களையும் ஒருங்கிணைக்கும் முகவர்களாக செயற்பட்டால் மட்டும் போதாது. அதற்கும் அப்பால் மாற்றத்தின் முகவர்களாக நம்பிக்கையின் முன்னுதாரணங்களாக வாழும் முன் உதாரணங்களாக மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் மாற வேண்டும். அப்படி மாறினால்தான் ஒரு சமூகமுடக்க காலத்தில் சமூகத்துக்கு தைரியம் ஊட்டலாம்; வழிகாட்டலாம்.
ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எத்தனை கட்சித் தலைவர்களிடம் இது குறித்து ஆழமான தரிசனங்களும் அதற்கு வேண்டிய வாழ்க்கை ஒழுக்கமும் உண்டு ? ஒரு சமூகமுடக்க காலத்தில் தனது சமூகத்திற்கு வழிகாட்ட முடியாத தலைவர்கள் எப்படி ரத்தத் துடிப்புமிக்க இளைஞர்களுக்கு வழி காட்டுவார்கள் ? இவ்வாறு வழி காட்டப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் தாம் செய்வது குற்றம் என்று தெரியாமலேயே ஒரு சிறு பகுதி இளையோர் வாளோடும் கஞ்சாவோடும் நிற்கிறார்கள். அல்லது யாருடையதோ கைப்பாவைகளாக மாறியிருக்கிறார்கள். இது தொடர்பில் ஆழமான சமூகப்பொருளாதார உளவியல் விளக்கங்களின்றி தமிழ் அரசியல்வாதிகள் வெட்டப்பட்ட கையையும் கையை உடலோடு சேர்த்துத் தைத்த மருத்துவரையும் இரு வேறு பரபரப்பான தலைப்புச் செய்திகளாகக் கடந்து போகிறார்களா?